வீட்டிலிருந்தவர்கள் விழித்துக்கொண்டதால் கந்தர்மட சந்தியில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சி தடுக்கப்பட்டதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அவ்வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்
யாழ்ப்பாணம் கந்தர்மட சந்தியிலிருந்து யாழ் இந்து மகளிர் கல்லுாரிக்கு செல்லும் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 11.30 மணியளவில் திருட்டு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்கள் மின் விளக்குகளை அணைத்து உறங்கிக்கொண்டிருந்த சமயம் , மோட்டார் சைக்களில் வந்த இருவர் குறித்த வீட்டினுள் திருட்டு முயற்சிக்காக சென்றுள்ளனர்.வீட்டிற்கு வெளியே யாரோ நடமாடுவதை அவதானித்த வீட்டார் அயலவர்களுக்கு தொலைபேசி மூலம் உடனே தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டிற்கு வரவே பதற்றமடைந்த திருடர்கள் தாம் கொண்டுவந்த மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுவிட்டு தப்பிசென்றுள்ளனர் .
குறித்த திருட்டு முயற்சி குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.