சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், யாழ். சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 77 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குறித்த மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இந்திய அரசாங்கம் வலியுறுத்தியதை அடுத்து 49 மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், எஞ்சியுள்ள 28 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
நாங்கள் சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது எங்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.
எங்களை கண்ட உடன் ஓடினால் இப்படித்தான் தாக்குவோம் என இலங்கை கடற்படையினர் எச்சரித்ததாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டோம்.
அங்கு எங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இரவு நேரத்தில் உணவுகள் வழங்கவில்லை.
கழிப்பறைகள் சரியாக இல்லை. மனித கழிவுகளை நாங்களே அள்ளும் நிலை ஏற்பட்டது. படகுகளை பார்க்க வேண்டும் என கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்களான நிலையில், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்த நேரத்தில் எங்களை விடுவித்துள்ளனர்.
ஆனால் படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டனர். தற்போது எங்களை விடுவித்தால் போதும் என்ற நிலைக்கு நாங்கள் வந்து விட்டோம்.
அந்த அளவுக்கு யாழ்ப்பாணம் சிறையில் கொடுமைகள் அனுபவித்துள்ளோம். ஆனால், படகுகளை விடுவிக்காமல் எங்களுக்கு எந்த பலனும் இல்லை.
நாங்கள் தாயகம் திரும்பினாலும் எங்கள் வாழ்வாதாரமான படகுகள் இல்லை என்றால் எங்களால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் சும்மா இருக்கும் நிலைதான் உருவாகும்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை மீட்டு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.