யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விடத்தற்பளை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளைப் பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இருவர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர்.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் மற்றும் சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைதடி, கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் – 1, சிறிய விக்கிரகம் – 1, சாமரை – 1, நீர் இறைக்கும் இயந்திரம் – 4, மின் மோட்டார்கள் – 2, வானொலி – 1, டீ.வீ.டீ. பிளேயர் – 2, போக்கஸ்ற் லைட் – 2, பெரிய பற்றரி – 1, மோட்டார் வயர் 500 மீற்றர், மருந்தடிக்கும் இயந்திரம் – 1, ஆலய உண்டியலில் இருந்து உடைத்தெடுக்கப்பட்ட சில்லறைக் காசுகள் ஆகியன மீட்க்கப்படுள்ளன.
இப்பொருட்கள் தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களிலிருந்து திருடப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார தெரிவித்தார்.
கைதவர்களுக்கு பாரிய கொள்ளைகளில் தொடர்புள்ளதாகத் தெரிவித்த அவர், சந்தேக நபர்களை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.