யாழ் யுவதியின் கொலையில் கிறிஸ்தவ குருமார்…

618

குறித்த உயிரிழந்த யுவதி பெரிய கோவில் என்றழைக்கப்படும் மரியன்னை தேவாலயத்தினில் ஞாயிற்றுக்கிழமைகளினில் மதபோதனைகளை மேற்கொண்டு வந்தவரென கூறப்படுகின்றது. அவ்வேளையினிலேயே இரண்டு இளம் மதகுருமார் அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்போது தமது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர்.

யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளம்யுவதி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டமை தொடர்பினில் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்த சில தரப்புக்கள் தயாராகிவருகின்றன. குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயது மதிக்கத்தக்க யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டா எனவும் இவர் குருநகர் பகுதியினை சேர்ந்தவரெனவும் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையினில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையினில் குடும்பத்தவர்கள் சடலத்தை பொறுப்பேற்றுள்ளனர். எனினும் இவரை தற்கொலைக்கு தூண்டியதாக உதவி பங்குதந்தையாக கடமை ஆற்றிய திரச்செல்வம் குயின்ஜ்ரன் பெணான்டோ [சொந்த ஊர் எழுவதீவு] மீது குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் வழங்கிய வாக்கு மூலப்பிரகாரம் குறித்த மதகுருமாரை பொலிஸார் கைது செய்யவில்லையெனவும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் குடும்பத்தவர்கள் இதனை கண்டித்து நாளை காலை யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே தருணம் பார்த்திருந்த சில தரப்புக்கள் இவ்விவகாரத்தினில் குளிர்காயவும் மனித உரிமை செயற்பாடுகளினில் ஈடுபட்டுவரும் கத்தோலிக்க மதகுருமார் மீது சேறு பூசவும் முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இத்தகைய தரப்புக்களே நாளை போராட்டத்தினை தூண்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில்,

ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தும், மிக நெருக்கமான முறையில் தம்முடன் இருக்குமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த யுவதி அவரது பெற்றோர்களிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தினை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) புங்கன்குளம் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்வில்லை. மறுநாள் திங்கட்கிழமை (14) மகளை காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் ஜெரோமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜெரோமி சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார்.

ஜெரோமியின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரு குருமார்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், இரு தினங்களாகியும்,இரு குருமார்களுக்கும் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக யாழ் ஆயரில்லத்துடன் தொடர்பு கொண்ட போதும் பதில் எதுவும் இல்லாமல் உள்ளது Jaffna-BesipJaffna-Besip01Jaffna-Besip02Jaffna-Besip03Jaffna-Besip05

 

 

4847
SHARE