இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா தலைமையில் உலகக்கிண்ணம் வென்று வரலாறு படைத்தது.
இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தான் ரணதுங்காவின் துருப்பு சீட்டாக இருந்தார்.
வாஸ் கூறுகையில், “1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிவிரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதும், ஓட்டங்களை கட்டுப்படுத்துவதும் தான் எனது முக்கிய பணியாக கொடுக்கப்பட்டது” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ”நான் ரணதுங்கா மேல் அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆரம்ப காலத்தில் அவர் என்னை கடுமையாக திட்டுவார்
இதனால் நான் அழுவேன். பிறகு அவரது விமர்சனங்கள் என்னை திருத்தவே என்பதை உணர்ந்து செயல்படுவேன். அவர் வீரர்களை நல்ல வழியில் அழைத்துச் செல்வதை விரும்புவார். தற்போது எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார்” என்றார்.
பந்துவீச்சாளர்கள் பற்றி கூறுகையில், ”கடந்த 2001ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் நான் 26 விக்கெட்டுகள் எடுத்தேன்.
இதை மறக்க முடியாது. இலங்கையில் பெரும்பாலும் ஆடுகளங்கள் முரளிதரனுக்கு ஏற்றவாறு தான் அமைக்கப்பட்டன. அனைவரின் கேள்வியும் அத்தகைய ஆடுகளத்தில் எப்படி விக்கெட் எடுத்தேன் என்பது தான்.
பந்துவீச்சாளர்கள் பாலைவனத்தில் பந்துவீச சொன்னால் கூட அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். அந்த அளவு வளைந்து கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

|