ரணில் உள்ளிட்ட ஐவர் நஞ்சருந்த வேண்டும்! விஷப்போத்தல்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

328
நல்லாட்சி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியினர் செய்துவரும் பகல் கொள்ளையானது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். மக்களை ஏமாற்றி செய்யும் ஊழல் ஆட்சியை நினைத்து பிரதமர் ரணிலும் அவரது திருடர் கூட்டமும் நஞ்சு அருந்தி சாகவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மாதுலுவாவே சோபித தேரரும் எதிர்பார்த்த நல்லாட்சி இது அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கலந்துகொண்டிருந்த கட்சியின்
உறுப்பினர்களான டிலான் பெரேரா, பந்துல குணவர்தன, உதய கம்மன்பில ஆகியோர் ஐந்து விஷ போத்தல்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பை ஆரம்பித்தனர்.

டிலான் பெரேரா குறிப்பிடுகையில்,

எமது அரசாங்கத்தில் ஊழல்கள் நிறைந்துள்ளதாகவும், மக்களின் பணத்தை மஹிந்த அரசாங்கம் சூறையாடுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மீது குற்றம் சுமத்தினர். ஆனால் இப்போது மக்களின் பணத்தை மட்டுமல்லாது சர்வதேசத்தையும் ஏமாற்றி சர்வதேச பணத்தையும் கொள்ளையடிக்கின்றனர்.

மத்தியவங்கியில் இடம்பெற்றுள்ள ஊழல் நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியாக இனங்காணப்பட்டுள்ளது. கொழும்பு –கண்டி அதிவேக நெடுஞ்சாலையை புனரமைப்பதாகக் கூறி இரண்டாவது கொள்ளையினை செய்துள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில் இதுவரை காலமும் மத்தியவங்கி நிதியில் எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது மத்தியவங்கி ஆளுநரோ கைவைத்ததில்லை.ஆனால் இந்த அரசாங்கம் மத்தியவங்கி நிதியை கொள்ளையடித்துள்ளது. மத்தியவங்கி ஆளுனர் அர்ஜுன் மஹிந்திரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக ஆகியோர் ஒன்றிணைந்து மத்தியவங்கி நிதியை கொள்ளையடித்துள்ளனர்.

அது அவ்வாறு இருக்கையில் புதிதாக நாட்டில் இன்னுமொரு மிகப்பெரிய கொள்ளையை ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.

எமது அரசாங்கம் இந்த நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை புனரமைத்துள்ளது. இன்று அனைவரும் இலகுவாக பயணிக்கக் கூடிய வகையில் நாம் இந்த நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம்.

ஆனால் நாம் மேற்கொண்ட வீதி அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்தும் மிகப்பெரிய மோசடியென எம்மை ஐக்கிய தேசியக் கட்சியும், எமது கட்சியில் இருந்து வெளியேறிய ஒருசிலரும் குற்றம் சுமத்தினர். நாம் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தூய்மையானவர்கள் மிகப்பெரிய கொள்ளையினை மேற்கொண்டுள்ளனர். அதாவது கொழும்பு –கண்டி அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக நாம் 3.5 பில்லியன் நிதியொதுக்கீடு செய்திருந்தோம். அதே பாதையினை அதைவிட அகலம் குறைந்த அளவில் நிர்மாணிக்க ஐக்கிய தேசியக கட்சி நாம் திட்டமிட்ட தொகையிலும் பார்க்க 5௦௦ பில்லியன் ரூபாய்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ளது.

அதுமட்டுமல்லாது தேர்தல் காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கொழும்பு-–கண்டி நெடுஞ்சாலை வீதிக்கான அடிக்கல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

அதேபோல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். ஆகவே இவர்கள் மக்களை ஏமாற்றி தமது ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் பாதாள உலக கோஷ்டிகளையும், கடத்தல்காரர்களையும் வைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நிதியமைச்சர் ரவி கருணாநாயக வின் ஆதரவாளர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் எனத் தெரிந்தும் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

அதேபோல் பதுளை பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஹரின் பெர்னாண்டோ மேள்கொள்கின்றார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இளைஞர் அணி என்ற பெயரில் கட்சியின் சின்னம் போதித்த கைபட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நாட்டையும் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எம்மை விமர்சித்தவர்கள் இப்பொது எம்மீது சுமத்திய குற்றச்சாட்டை விடவும் இரண்டு மடங்கு கொள்ளையடிக்கின்றனர்.

அண்மையில் மாதுலுவாவே சோபித தேரர் ஒரு நிகழ்வில் உண்மையான கருத்தொன்றை முன்வைத்திருந்தார். அதாவது மக்களின் சொத்துகளை சூறையாடிய ஆட்சியாளர் யாராக இருந்தாலும் அவர்கள் விஷம் அருந்தி சாகவேண்டும் எனக் குறிப்பிட்டார். அவர் கோரிய அந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தார்.

ஆகவே சோபித தேரரின் கருத்தானது ரணிலையே சுட்டிக் காட்டியுள்ளது. எனவே இப்போது நாம் எமது செலவில் ஐந்து விஷ போத்தல்களை வாங்கி வந்துள்ளோம். இந்த ஐந்து போத்தல்களையும் பிரதமர் ரணிலுக்கும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், ஊவா மாகாண முதலைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கும், நிதி அமைச்சர் ரவிக்கும், மத்தியவங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கும் கொடுக்கின்றோம்.

இந்த விஷத்தை எடுத்துக்கொண்டு மாதுலுவாவே சோபித தேரரின் முன்சென்று தாம் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுவிட்டு இதனை அருந்தி சாகவேண்டும் என்றார்.

SHARE