ரவிராஜ் கொலை – வெளிநாட்டிலுள்ள சந்தேகநபரை அழைத்துவர நடவடிக்கை

284
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் மூன்று கடற்படையினர் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பிலான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை சர்வதேச பொலிஸார் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவ்டிக்கைகளை மேற்கொள்ளவே விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள சந்தேக நபர், ரவிராஜ் கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டவர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே, மேலதிக விசாரணைகளுக்காக அவரை அழைத்து வருவதற்கான அழைப்பாணையை விடுக்கும் செயற்பாடுகள் தற்போது சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடாக இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ரவிராஜ் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை வீரரான நேவி சம்பத் என அறியப்படும் சம்பத் முனவீரருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரு கடற்படை வீரர்களும் முன்னாள் பொலிஸ் உளவுப் பிரிவு கான்ஸ்டபிளும் விளக்கமறியலில் உள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், கொலையாளி வந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டி உள்ளிட்டவை புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் பெரும்பாலும் நிறைவுற்றுள்ளன.

வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரை நாட்டுக்கு அழைத்து வந்ததும் ரவிராஜ் விவகார விசாரணைகளில் மேலும் திருப்பம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கும் பொலிஸார், அந்த நடவ்டிக்கை ஊடாக ரவிராஜ் விவகார விசாரணைகள் பூரணப்படுத்தப்படும் என நம்புகின்றனர். நடராஜா ரவிராஜ் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி கொழும்பில் அவரது வீட்டின் அருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

SHARE