ராஜபக்ஷவின் இனவாதத்திற்கு அஞ்சாது அரசியல் தீர்வை வழங்கவேண்டும் அரசு: சண்.குகவரதன்

230

மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது கூட்டத்தினரினதும் இனவாதத்திற்கு அஞ்சாது தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை அரசு வழங்க வேண்டும் என மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்காக இன்றுவரை குரல்கொடுத்து பங்களிப்பு வழங்கினார் என்றால் அது மிகையாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சண்.குகவரதன் மேலும் கூறியிருப்பதாவது,

“தமிழில் தேசிய கீதத்தை பாட இடமளிக்கமாட்டோம் என இனவாத அடிப்படைவாதச் சக்திகள் அரசுக்கு அச்சுறுத்தல் விடுத்தபோதும் அதற்கெல்லாம் அஞ்சாது இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின் அதியுயர் இராஜதந்திர நகர்வாகும்.

இதனை வரவேற்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளுடனான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கவும் அரசு துணிச்சலுடன் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்பு 1949இல் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.

அதன் பிறகு 2016இல் படித்தது வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இனவாதிகள் இதற்கு எதிராக எத்தனை வியாக்கியானங்களைக் கூறினாலும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை அரசமைப்பு அங்கீகரிக்கின்றது.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க  நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலேயர் என அனைத்து மக்களும் ஒற்றுமை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

இதனை மறந்து செயற்பட்டதால் கடந்த காலங்களில் நாம் கசப்பான அனுபவங்களை அனுபவிக்க வேண்டி நேர்ந்தது. எனவே, இனியும் இனவாதம், மதவாதம் வேண்டாம்.

பிரிவுகள் வேண்டாம். அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழும் புதியதொரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அண்ணன் மனோ கணேசன் தமிழில் தேசியகீதம் பாடுவதற்காக குரல் கொடுத்தார். அத்தோடு தேசிய நல்லிணக்க அமைச்சராக பதவியேற்ற பின்னரும் இதற்காக குரல் கொடுத்தவர். இன்று அவரது பங்களிப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தையே அரசியல் ஆதாயமாக்கிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது கூட்டத்தினரினதும் இனவாதத்திற்கு அஞ்சாது விசேடமாக வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு முழுமையான அரசியல் அதிகாரங்களை வழங்கி ஜனநாயக உரிமைகளை வழங்க அரசு உடனடியாக செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

018

SHARE