ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பாக அவரது தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஜீன் மாதம் 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்பவரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.
இவர் கடந்த 18ம் திகதி சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இவரது பிரேத பரிசோதனையின் போது தங்களது தரப்பு மருத்துவர் உடனிருக்க வேண்டும் என ராம்குமாரின் தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தனியார் மருத்துவருக்கு பதில், அரசு மருத்துவர் ஒருவரை கூடுதலாக நியமித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் கால அவகாசம் கேட்டு பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ராம்குமாரின் உடலை செப்டம்பர் 30ம் திகதி வரை பாதுகாக்க கோரி உத்தரவிட்டனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை தொடர்பாக பரமசிவம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து விரைவில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெறும் என கருதப்படுகிறது.