லண்டன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, எட்டு மாதக் குழந்தையைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி

176
லண்டன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, எட்டு மாதக் குழந்தையைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி
பெற்றோரின் கோரிக்கைகளை நிராகரித்து எட்டு மாதக் குழந்தையொன்றின் செயற்கை உயிர்காப்பு கருவியை அகற்றுவதற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிறக்கும்போதே மிக அரிதான மரபணுத் தாக்கத்தால் பீடிக்கப்பட்ட சார்லி கார்ட் என்ற ஆண் குழந்தை, பிறந்தது முதல் கடந்த எட்டு மாதங்களாக செயற்கை உயிர்காப்புக் கருவியின் உதவியுடன் உயிர்வாழ்ந்து வருகிறது.

மருத்துவ ரீதியாக, இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை அந்நோயில் இருந்து மீட்க முடியாது. நோயாளி உயிருடன் மட்டுமே இருப்பார். வேறெந்த அசைவும் அவரிடம் இருக்காது.

இந்தக் குழந்தையின் செயற்கை உயிர்காப்புக் கருவியை அகற்றுவதன் மூலம், கௌரவமான மரணத்தை அதற்குப் பெற்றுத் தரவேண்டும் என்று, குழந்தைக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, உயிர்காப்புக் கருவியை அகற்ற மருத்துவமனைக்கு அனுமதியளித்தது.

இந்தத் தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது, ‘வேண்டாம்’ என்று அந்தக் குழந்தையின் பெற்றோர் கதறியழுதது அங்கு கூடியிருந்தோரைக் கண்கலங்கச் செய்தது.

தமது குழந்தையின் சிகிச்சைக்காக இணையதளம் மூலம் சுமார் ஒன்றரை மில்லியன் யூரோக்களைத் தாம் திரட்டியிருப்பதாகவும், அமெரிக்க மருத்துவமனை ஒன்று இந்தக் குழந்தைக்கான சிகிச்சையை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

என்றபோதும் நீதிபதிகள் பெற்றோருக்கு எதிரான தீர்ப்பையே வழங்கினர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதா, இல்லையா என்று பெற்றோர் தமது தரப்பு சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.

SHARE