லயோனல் மெஸ்சிக்கு எலும்பு முறிவு

119

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் லயோனல் மெஸ்சிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மூன்று வாரங்களுக்கு அவரால் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, தற்போது கிளப் அணியான பார்சிலோனாவில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிவில்லா அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்சி விளையாடினார். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மெஸ்சி அபார கோல் அடித்தார்.

அதன் பின்னர், 26வது நிமிடத்தில் எதிரணி வீரரான பிராங்கோ வஸ்கியூஸ் லேசாக தள்ளிவிட்டதில் மெஸ்சி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது வலது கை மைதானத்தில் பலமாக இடித்தது.

இதனால் வலியால் துடித்த மெஸ்சி ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரை பரிசோதித்ததில், முழங்கைக்கு சற்று கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், மெஸ்சியால் 3 வாரங்கள் விளையாட முடியாது என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த எலும்பு முறிவு காரணமாக, மெஸ்சியால் 6 ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் பார்சிலோனோ அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிவில்லா அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE