சம்பந்தனின் அரசியல் வரலாற்றில் அவரது கால்த் தூசிக்கு பெறுமதியற்ற உதயகம்பன்பிலவும் அவர் சார்ந்த ஆதரவாளர்களும் தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகளும் தமது மீசையை முறுக்கிக் கொண்டு தமிழ் மக்களுடைய வடகிழக்கு பிரதேசத்தில் இருக்கக்கூடிய காணிகளைப் பார்வையிட்டமை தவறு எனக் கூறும் இவர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். குறிப்பாக வடகிழக்கில் தமது பூர்வீகக் காணியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் தமிழ் மக்கள். அத்துமீறு இராணுவம் தமது உயர்பாதுகாப்பு வலயங்களாக தமிழ் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி வைத்திருக்கின்ற பொழுது, அக்காணிகளின் உரிமையாளர்கள் சம்பந்தன் அவர்களிடம் முறையிடுகின்ற பொழுது அதனைப் பார்வையிடச் சென்றதன் தவறு என்ன? இனவாதப் பேச்சுக்களைத் தூண்டி எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விளக்கும் நோக்கிலேயே இவர்களுடைய செயற்பாடு காணப்படுகின்றது.
தற்போதைய இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீரவின் அனுமதிபெற்றே சம்பந்தன் காணிகளைப் பார்வையிடச் சென்றார் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் குறிப்பிட்டு முல்லைத்தீவில் கேப்பாப்பிளவு பிரதேசத்தையும் மன்னாரில் தள்ளாடிப் பிரதேசத்தையும், யாழ்ப்பாணத்தில் பலாலி உட்பட தீவகப் பிரதேசத்தையும், கிளிநொச்சிப் பகுதியில் பூநகரிப் பிரதேசத்தையும் அது போன்று திருகோணமலை மாவட்டத்தில் சைனாவே, கோனேஸ்வரம், நிலாவெளி போன்ற பகுதிகளையும், மட்டக்களப்பில் கல்லடி, வாழைச்சேனை, புனானை, திருக்கோவில், பொத்துவில், கல்முனை போன்ற பிரதேசங்கள் உள்ளடங்களாக இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இதிலும் குறிப்பாக வன்னிப்பிரதேத்தில் மட்டுமே அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, முழங்காவில், கொக்காவில், புதுக்குடியிருப்பு, கேப்பாப்பிளவு, வட்டுவாகள், விசுவமடு, நெடுங்கேணி போன்ற பிரதேசங்களிலும், காட்டுப் பிரதேசங்களிலும், மக்கள் நடமாடும் பிரதேசங்களிலும், ஏற்கனவே விடுதலைப்புலிகளினுடைய முகாம் அமைக்கப்பட்ட பிரதேசங்களிலும் பெருமளவிலான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் மக்கள் அகதிகளாக சொந்த நிலம், வீடுகள் இன்றி ஒரு வாழ்க்கை வாழவேண்டுமா? காணிப் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை, ஆட்கடத்தல், காணமற்போனோர் பிரச்சனை என்று நாளாந்தம் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு தமிழ் மக்களினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின்களாலும் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றது. எத்தனையோ மனுக்கள் கையளிக்கப்பட்டுவிட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தின் நூறு விடயத்தில் பெற்றோல், பால்மா, தாதியருக்கான கொடுப்பனவு, சம்பள உயர்வு, மின்சாரக் கட்டணக் குறைப்பு என்ற ஐந்து விடயங்களைத் தவிர மிகுதி தொன்னூற்றைந்து விடயங்களும் பூர்த்தியாக்கப்படாத நிலமையில் இன்னமும் இருந்து வருகின்றது. இதன்போது தான் மீண்டும் மஹிந்த அரசாங்கம் ஆட்சி செய்தால் என்ன என்ற கேள்விகூட மக்கள் மனதில் எழத் தோன்றுகின்றது. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அணைத்தும் காணி, பொலிஸ் அதிகாரம் தருவதாக பசப்பு வார்த்தைகள் கூறிவந்துள்ளது. பொலிஸ் அதிகாரம் இல்லையென்றாலும் காணி அதிகாரத்தைக் கொடுப்பதற்கு ஏன் இந்த அரசாங்கம் தயங்குகின்றது. கூட்டு அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், வடமாகாணசபையுடனும் செய்து கொண்ட உள்ளுர் ஒப்பந்தங்கள் இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
யுத்தத்தைக் காட்டி சூரையாடிய சிங்கள இனவாதிகள் பிழைப்பு நடத்துவற்காக மீண்டும் இனவாதத்தை தூண்டி தமிழ் மக்களுடைய சொத்துக்களையும், காணிகளையும், இல்லங்களையும் அபகரிப்பதற்கான மற்றுமொரு திட்டமாகவே கம்பன்பிலவின் கருத்தும் அரசாங்க இனவாதிகளின் கருத்தும் அமையப்பெறுகின்றது. கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக இனவாதத்தைத் தூண்டி அதில் குளிர் காயும் நடவடிக்கைகளை கம்பன்பில போன்றோர் ஈடுபடுவது நல்லாட்சி அரசாங்கத்தில் உகந்ததொன்றல்ல. தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை இருட்டடிப்புச் செய்வதற்காகவே இவ் அரசாங்கம் இனவாதக் கருத்துக்களைக் கூறி வருகின்றது.
தமிழ் மக்களுடைய காணிகளை சுவீகரித்துக் கொண்டுள்ள இராணுவம் அவ்விடத்தில் இருந்து வெளியேறி அப்பிரதேச மக்கள் இருப்பதற்கு இடங்களை கையளித்துவிட்டுச் செல்வதற்குப் பதிலாக இராணுவ முகாமுக்குள் சம்பந்தன் அத்துமீறி நுழைந்துவிட்டார் எனக் கூறுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு உகந்ததொன்றல்ல.
-இரணியன்-