வடக்கின் ஆளுநருக்கு ஓர் அவசர மடல்

262
வடக்கு மாகாணத்தின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களுக்கு அன்பு வணக்கம். வடமாகாண சபையின் ஆளுநர் பதவியை வகிக்கும் தங்களுக்கு அவசரமாக இக்கடிதம் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென்பதை முதலில் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற பதவி சமகால சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. அதிலும் தமிழ் மொழி தெரிந்த ஆளுநர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அவர்களின் உணர்வு நிலைகளை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பது எங்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஆளுநராக நீங்கள் பதவி ஏற்றபோது வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு கனவான். எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவதில் சிரமம் இருக்க முடியாது என்று நீங்கள் கூறியபோது, உங்கள் மீதான மதிப்பும், நம்பிக்கையும் வடபுலத்து மக்களிடம் அதிகரித்தது.

அதேநேரம் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவி ஏற்ற தாங்கள் தமிழ்மொழி தெரிந்தவர் என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று வடக்கின் முதலமைச்சர் உங்களை விழித்துக்கூற, உங்கள் மீதான எங்களின் மதிப்பு மேலும் ஒருபடி உயர்ந்தது எனலாம்.

அந்தவகையில் இந்த உண்மையை முதலில் தங்களுக்குத் தெரியப்படுத்துவது ஊடகம் என்ற வகையில் எங்களின் தார்மீகக் கடமை ஆகும்.

அதேநேரம் கடந்த காலங்களில் இரண்டு ஆளுநர்கள் வடபுலத்தில் இருந்துவிட்டுச் சென்றுள்ளனர். அதில் ஜி.ஏ.சந்திரசிறி ஒருவர். மற்றையவர் பலிகக்கார இவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சில கருத்துப் பதிவுகளை வைத்துள்ளனர்.

ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் பற்றிய கணிப்பு என்பது அவர் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த போது ஆற்றிய கருமங்களும் கருத்தில் கொள்ளப்பட்டே அவர் தொடர்பிலான மதிப்பீட்டை தமிழ் மக்கள் பதிவாக்கிக் கொண்டனர்.

எனினும் யுத்தத்துக்குப் பின்னர் வடபுலத்தில் கட்டிடங்கள், வீதிகள் அமையப் பெறுவதில் ஜி.ஏ.சந்திரசிறியின் வேகமான, இறுக்கமான ஆளுமை பெரும் பங்காற்றியது என்பதைக் கூறாமலும் விட்டுவிட முடியாது.

தவிர, தங்களுக்கு முன்னர் இருந்த ஆளுநர் பலிகக்கார ஒரு நல்ல மனிதர். தேவையில்லாத சோலிகளில் அவர் தலையீடு செய்வதில்லை என்பது பொதுவான கருத்து.

எனினும் அவரின் சேவைக்காலம் குறுகியதாக இருந்தமை தமிழ் மக்களுக்கு விருப்பமானதல்ல என்பதையும் கூறித்தானாக வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க, தற்போது வட மாகாணத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள தாங்கள் அரசியல் புலத்தில் அமைச்சராக இருந்தவர் என்பதால் உங்களின் நடவடிக்கைளுடன் அரசியல் சாயமும் சேர்ந்தே பார்க்கப்படும் என்பது உண்மையே.

எனினும் அரசியல் புலத்தை விடுத்து, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்றுள்ள தாங்கள், யுத்தத்தால் பாதிப்படைந்துள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம் போக்கிய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே என்று வடபுலத்து மக்கள் உங்களைப் புகழக்கூடிய வகையில் நீங்கள் செயற்படுவீர்கள் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

இதைவிடுத்து யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களிடம் நீங்கள் விவாதம் புரியவோ அல்லது வடபுலத்து மண்ணில் சமய அமைப்புகளை நிறுவவோ முற்படமாட்டீர்கள் என்பதும் எங்களின் திடமான நம்பிக்கை.

வடபுலத்தில் உங்களின் பணியில் மக்கள் நலன் பெற்றனர் என்று போற்றும் வகையில் உங்களின் சேவையை தமிழ் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

re-22-350x350

SHARE