வடக்கு அபிவிருத்திக்கு மூன்று இலட்சம் கோடி தேவை; ரணிலுடனான சந்திப்பில் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

331

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை மாலை சந்திப்பொன்று நடைபெற்றது. அதன்போதே, முதலமைசர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் ஆளுநர் பளிகக்கார, வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்கள், திறைசேரியின் முன்னாள் செயலளார் எஸ்.பஸ்கரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோன்று, வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவில் மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாகாணத்தின் உடனடி தேவைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபாய் தொகை இரட்டிப்பாக்கப்பட வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையும் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்களின் தேவைகள், அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக முதலமைச்சரால் எடுத்துரைக்கப்பட்டது.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. மிகப் பெரியளவிலான நிதி முதலீட்டுத் திட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாண நிதி உதவி வழங்கும் மாநாட்டில் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததுடன் ஜப்பான் போன்ற வெளிநாடுகள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே, வழங்கப்பட்ட தேவை மதிப்பீடுகளை மீளாய்வு செய்வதுடன், மேற்கொள்ளப்படவேண்டிய பாரியளவிலாள நிதி முதலீட்டுத் திட்டங்கள் பாரிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள் உள்ளடக்கிய அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கின் தேவைகள் தொடர்பான மகஜரொன்றை பிரதமரிடத்தில் கையளித்ததுடன் மாவட்ட ரீதியாக உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள், தேவைகள் தொடர்பான அறிக்கைகளும் அரச அதிபர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE