பெண் பிரதிநிதிகளை உள்வாங்கும் வகையில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அமையவேண்டும் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனங்கள்
இரண்டையும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில்
பயன்படுத்தவேண்டுமென யாழ்.தேர்தல் மாவட்டத்தில் மூன்றாவது அதிகூடிய
விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது
ஆணையை வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய
பட்டியல் ஆசனங்கள் உட்பட 16 ஆசனங்களைக் கைப்பற்றி தேசிய ரீதியில் மூன்றாவது
பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தற்போது
பாராளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளில் அனைவரும் ஆண்களாகவே
உள்ளனர். எமது கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம்
அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு
வருகின்றது. பொதுத் தேர்தலில் பெண்களுக்கான ஆசனங்கள்
ஒதுக்கப்பட்டிருந்தபோதும் எந்தவொரு பெண் பிரதிநிதித்துவமும்
தெரிவாகவில்லை. அவ்வாறிருக்கையில் வடகிழக்கில் பெண்கள் பல்வேறு
பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். பெண்களைத் தலைமைத்துவமாகக்
கொண்ட குடும்பங்கள் பலவுள்ளன.
ஆகவே வடகிழக்கைப் பொறுத்தமட்டில் பெண்களின் குரலாக பாராளுமன்றப்
பிரதிநிதித்துவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்
உள்வாங்கப்படவேண்டும். அதன்மூலம் பல்வேறு நடவடிக்கைகளை
எடுக்கமுடியும் என்பது கண்கூடு.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள இரண்டு தேசியப் பட்டியல்
ஆசனங்களையும் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரண்டு
பெண்களுக்கு வழங்கவேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.
இதுதொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர், கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் ஆவன
செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அதேவேளை பெண் பிரதிநிதித்துவங்கள் எமது கட்சியில் உள்வாங்கப்படுவதன்மூலம் தேசிய
அரசியலில் எமது கட்சி பால் நிலை சமத்துவத்துடன் முழுமை பெறும் என்பது எனது
நிலைப்பாடாகும் என்றார்.