வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுபெறும் நோக்கம் கூட்டமைப்பிற்கு துளிகூட இல்லை – பா.அரியநேத்திரன்

689
கறுப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு எவரும் அருகதையில்லை. தங்களது கறுப்புக்கண்ணாடியை கழட்டிவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்து கொண்டு  தங்களைப் பார்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழ் தேசியத்துக்காக தந்தை செல்வாவின் மென்சக்தி போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிகளவில் இருந்தது. அதேபோன்று வடக்கு கிழக்கில் நடைபெற்ற மென் சக்தி போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பானது ஒரு அழியாத வரலாறாகவே உள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டமாக இருக்கலாம், தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் இவைகள் அனைத்தும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்து பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டி நடத்தப்பட்டவையே.

2009ஆண்டு மே மாதத்துக்கு பிறகு இலங்கையில்  நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை சனல்4 என்னும் தொலைக்காட்சி சேவை ஆவணப்படமாக திரையிட்டு காட்டியது. அதில் பெண்கள் மிகவும் கொடூரமாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

இசைப்பிரியா என்ற ஊடகப்பெண், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தார் என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வரலாறு கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு உள்ளது.

ஆனால் தற்பொழுது நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கின்றோம். அது உண்மையல்ல. ஆள்பவர் மாத்திரமே மாறியிருக்கின்றார். அதனால் எமக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

ஹம்பாந்தோட்டை முள்ளை பொலநறுவை முள்ளால் எடுத்துள்ளோம். அவ்வளவுதான் மாற்றம். முள்ளு முள்ளாகத்தான் உள்ளது. தமிழ் தேசிய அரசியலை வென்றெடுப்பதற்காக மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் நாங்கள் எட்டுப்பரீட்சை எழுதியிருக்கின்றோம்.

எட்டுப்பரீட்சை என்பது எட்டு தேர்தலை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். விடுதலைப்போராட்டத்திற்கு பின்னர் நாம் எதிர்கொண்ட முதலாவது தேர்தல் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டோம். நாங்கள் 14பேரும் அன்று தெரிவு செய்யப்படாவிட்டிருந்தால் இந்த வெல்லாவெளி பிரதேசமும் சிங்கள குடியேற்றமாக மாறியிருக்கும்.

நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை  ஆதரித்ததன் காரணமாகவே இன்று நாங்கள் சர்வதேசத்தில் நின்று நீதி கேட்டு கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வாக்களிக்காவிட்டிருந்தால் எமது மக்களை சோரம் போகச் செய்திருப்பார்கள்.

சிங்கள குடியேற்றங்களை செய்யும் போது வாயை பொத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். அதனை தடுப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து கொண்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் தயாராகவுள்ளோம். அரசியல் பணி என்பது நீண்ட பயணம். கிழக்கு மாகாணசபையில் நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்ததன் காரணமாக அதுதான் எங்கள் அரசியல் பயணம் என சிலர் நினைக்கின்றனர்.

மாகாணசபை என்பது எங்கள் அரசியல் பணியின் ஒரு அங்கம். எங்கள் இலட்சியம் என்பது நீண்டபயணம். இந்த பயணத்தில் எட்டுப்பரீட்சையில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். தற்போது ஒன்பதாவது பரீட்சையை எதிர்கொண்டுள்ளோம்.

இந்த ஒன்பதாவது பரீட்சையான பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் மூலம் தற்போது ஐ.நா.வின் வாசல்படியை தட்டிக்கொண்டிருக்கும் நாங்கள் உள்ளே செல்வதற்கான நிலையேற்படும்.

மாகாணசபை என்பது எமது மக்களின் அன்றாட தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய தற்காலிக ஏற்பாடு வடக்கு கிழக்கை பிரித்து தீர்வுத்திட்டத்தினைப் பெறும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு துளிகூட இல்லை. கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகளவில் உள்ளனர். தமிழ் உறுப்பினர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர்.

இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. இந்த விடயங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை. கறுப்புக்கண்ணாடியை கழட்டிவைத்துவிட்டு வெள்ளைக்கண்ணாடியை அணிந்துபார்த்தால் எங்கள் பணி எதுவென்று புரியும்.

எமக்கான உரிமை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: அரியநேத்திரன்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பயணம் என்பது ஒரு தாயகத்தில் வாழக்கூடிய மக்கள் தன்னாட்சி அதிகாரம் அற்று சுதந்திரம் அற்று அங்குள்ள பெரும்பான்மை இனத்தவரின் கீழ் அடிமைகளாக இருக்காமல் அதனை அறுத்தெறிந்து ஒரு இனத்திற்குத் தேவையான உரிமையைப் பெறும் அரசியலே கூட்டமைப்பின் அரசியல் பயணமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

நேற்று மட்டக்களப்பு எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியானது பாடசாலை அதிபர் சா.பரமானந்தம் தலமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம், உறுப்பினர்களான மா.நடராசா,பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை) மற்றும் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.புள்ளைநாயகம், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள். அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று புதிய அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பெடுத்து ஆட்சி செய்து வருகின்றதே தவிர தமிழ்மக்களுக்கான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை கூட்டமைப்பை பொறுத்தவரையில் ஆட்சியை மாற்றுவது மாத்திரம் தமது கடமையல்ல 65 வருடகாலமாக தமிழர்கள் பட்ட துன்பதுயரங்களுக்கு இறுதித்தீர்வுகாண்பதே எமது நீண்டநாள் இலக்கு என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது.

வெறுமனே அரசாங்கத்தில் போய் சேர்ந்து கொண்டு அமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு நாங்கள் தயாரில்லை, எமது மக்கள் கூட்டமைப்பிற்கு இன்று நேற்றல்ல பல தசாப்தகாலங்களாக ஒருமித்து பலப்படுத்தி வருகின்றார்கள்.

நாங்கள் இந்தநாட்டிலே நடைபெற்ற எட்டு தேர்தல் பரீட்சையில் சித்தியடைந்திருக்கின்றோம், அதன்காரணமாக எங்களை சர்வதேசம் மதித்து எங்கள் கருத்துக்களையும் உள்வாங்கி செயற்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற எந்தத்தேர்தலாக இருந்தாலும் அவை அனைத்திலும் கூட்டமைப்பு அதீத வெற்றியீட்டி சாதனை படைத்திருக்கின்றது இதற்கு முழுக்கு முழுக்க தமிழ்மக்களே பொறுப்பானவர்கள் அவர்களது பலம் எம் பக்கம் இருக்கும் வரைக்கும் தமிழர்களுக்கான தீர்வை பெறுவதில் எமக்கு சிரமம் கிடையாது.

தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால் எமது எல்லைக்கிராமங்கள் எங்கள் கைவசம் இருந்து பெரும்பான்மை இனத்தவர்களினால் மிகவும் இலகுவாக பறிக்கப்பட்டிருக்கும் இன்று நாங்கள் சகலவற்றையும் இழந்து நிலமற்றவர்களாகப் போயிருக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கும்.

கூட்டமைப்பானது இணைந்த வடகிழக்கில் எங்களுக்குரிய உரிமையைத்தான் கேட்டு நிற்கின்றோம் அந்த உரிமையை தரும் வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் நாங்கள் மகிந்தவை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்றுதான் மைத்திரிக்கு வாக்குச்சேர்த்தோம்,

மாறாக மைத்திரி எங்களுக்கு எதையும் செய்வார் என்று நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை இரண்டு பேரும் முள்ளுத்தாள் ஒன்று அம்பாந்தோட்டை முள்ளு, மற்றையது பொலநறுவை முள்ளு இரண்டு முட்களும் குத்தும் என்பது எமக்குத் தெரிந்த விடயம்.

நாட்டிலே புதிய ஆட்சி வந்து விட்டது தற்போது புலனாய்வாளர்கள் புதிய செயற்பாட்டில் மீண்டும் இறங்கிருக்கின்றார்கள் நேற்று ஒரு பாடசாலைக்குச்சென்று அங்குள்ள ஆசிரியரை அழைத்து உமது உறவுகள் எந்த நாட்டில் வசித்து வருகின்றார்கள் என்ற விளக்கத்தினை கேட்டிருக்கின்றார்கள்.

இப்படியாக பல வேலைத்திட்டங்களில் இலங்கை புலனாய்வாளர்கள் இன்றும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறு இவர்களது கெடுபிடி தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றது.

இதுதான் புதிய ஆட்சியின் பயன்.   இந்தியப்பிரதமர் மோடி வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளயிருக்கின்றார் அவரது விஜயம் தமிழ்மக்களை பொறுத்தவரையில் மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.

அதனை கூட்டமைப்பு வரவேற்கின்றது. மோடியின் வருகை தமிழ்மக்களுக்கு நல்ல செய்தியினை கொடுக்கவேண்டும் வெறுமனே இந்தியப்பிரதமர் வந்தார் வடமாகாணம் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டார் என்று இராமல் அவர் இந்த அரசாங்கத்திற்கும் சர்வதேச விசாரணைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கின்றார் என்ற செய்தியை கூறவேணடும் அதனைத்தான் கூட்டமைப்பும் எதிர்பார்க்கின்றது எனக்கூறினார்.

SHARE