வடக்கு மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர தவறிய முதல்வர் -தவராசா கலையரசன்

163

கிழக்கு மாகாண மக்களை சிதைக்க எத்தனிப்பதை நிறுத்த வேண்டும் என நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்மையில் கிழக்கிற்கு விஜயம் செய்து மக்களை சந்தித்தமை தொடர்பாக இன்று கருத்துக் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து மக்களை சந்தித்து சில விடயங்களை கூறி வருவதாக அறிகின்றோம்.

வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் பொழுது தங்களது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அறியாதவர். வடக்கிலுள்ள பிரச்சினைகளை தீர்த்திருக்க வேண்டியவர். இவை அனைத்தையும் தவறவிட்ட தலைவரே சீ.வி.விக்னேஸ்வரன்.

வடமாகாண சபைக்கு முதலமைச்சராக இருந்தவேளையில் கிழக்கு மாகாணம் பற்றி கருத்துக்கூறிய போதெல்லாம் நான் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கிழக்கு மாகாணம் பற்றி பேச முடியாது, செயற்பட முடியாது என அதிகாரத்தில் இருக்கும்போது பேசியவரே முன்னாள் வடக்கு மாகாண முதல்வர்.

அதிகாரங்களையெல்லாம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாத தலைவர் இப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சின்னாபின்னமாக்கி சிதறடிக்க எத்தனிப்பது நகைப்பிற்குரியது.

இனரீதியான பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து கொண்டு வாழுகின்ற சூழலில் கிழக்கிலே இருக்கின்ற தமிழர்களை சிதைப்பதற்கு எந்தவொரு கொள்கையுமில்லாமல் நேரத்திற்கொரு கருத்தும், நாளுக்கொரு கருத்தும் சொல்லும் முன்னாள் வடக்கு முதல்வர் எங்களை கூறுபோட முற்படுவது கிழக்கை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவே பார்க்கின்றோம்.

இப்பொழுது எங்களது தமிழர்களை பொறுத்தவரை, எங்களது பிரச்சினைகள் நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்யும் நிலையில் தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் இவற்றுக்கான முன்னெடுப்புகள் முன்னெடுத்தாலும் தாமதங்கள் ஏற்படுகின்ற சூழலில் எம்மையும் மக்களையும் குழப்பி கூறுபோடுகின்ற செயலை அவர் மாத்திரமல்ல அவரோடு சேர்ந்து செயற்படுகின்ற ஊடுருவிகளும் செயற்படுவது மனவேதனையான விடயம்.

இன்று வடக்கும் மற்றும் கிழக்கு இணைப்பு என்பது தமிழர்களது இதயத்துடிப்பாக இருந்தாலும் இன்று வடக்கு வேறு கிழக்கு வேறு என்ற அடிப்படையில் நிர்வாக ரீதியான செயற்பாடுகள் இருந்தாலும் கிழக்கு மாகாணம் எனும் போது நாங்கள் தீர்க்கதரிசனமாக செயற்பட வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

அந்த அடிப்படையில் வடக்கு முன்னாள் முதல்வர் ஒரு சிலரோடு சேர்ந்து குழப்ப முற்படுவது வேதனையழிக்கிறது. முதல்வராக இருக்கும்போது அதிகாரங்களை பயன்படுத்தி சாதிக்க வேண்டியவராக இருந்தார்.

ஆனால் அவரது முக்கியமான குறிக்கோளாக இருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதைத் தான் கையிலெடுத்துக் கொண்டு செயற்பட்டதை கடந்த காலத்திலும் சரி. தற்காலத்திலும் கூட அறிந்துகொண்டு இருக்கின்றோம்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வரோடு இணைந்து பல கட்சி தாவியவர்களும், பல துரோகங்களையும் இனத்திற்கு செய்தவர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

நான் தவிசாளராகவும், மாகாண சபை உறுப்பினராகவும் இருந்து தளங்களில் நின்று செயற்பட்டிருக்கின்றேன். மக்கள் தங்களது ஆணையை கட்சிக்கும், எங்களுக்கும் வழங்கி பதவிகளில் வைத்திருப்பது மக்களுக்கு சேவைகளை புரிவதற்கே. எங்களது இயலாமையை வைத்துக்கொண்டு கட்சியை குறை கூறுவது வேடிக்கையான விடயம்.

எங்களது அரசியல் பயணத்தில் கட்சி தடையாக இருந்ததில்லை. ஆனால் வடக்கு முதல்வரோ தமிழ் தேசிய கூட்டமைப்பையும், எங்களது தமிழ் மக்களையும் பிரித்தாலும் செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார்.

முதலமைச்சர் பதவிக்காலத்தில் திறம்பட செயற்பட்டிருந்தால் சிறப்பான தலைவராகவும் இருந்திருப்பார் அதை எமது கட்சி தலைமையும் ஏற்றுக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE