வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடமாகாணசபையினால் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்தின் கணக்கில் பல லட்சக் கணக்கில் பணம் சேர்ந்திருப்பதாகவும் தமிழக உறவுகளுக்கு உதவுவதற்காக வர்த்தகர்கள், அரசியல் வாதிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படும் அதேநேரம் (கைதடியில் உள்ள ஹற்றனஷினல் வங்கி இல.241020001301) இந்த இலக்கத்திற்கு அனைவரும் ஆர்வத்துடன் வந்து பணத்தை வைப்பிலிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணசபையின் அமைச்சர்கள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து முப்பத்தைந்து லட்சம் (35,000,00.00) ரூபாவும், போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் முப்பது லட்சம் (30,000,00.00) ரூபாவும், விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் நாற்பது லட்சம் (45,000,00.00) ரூபாவும், கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்கள் முப்பத்தைந்து லட்சம் (35,000,00.00) ரூபாவும், முதலாமைச்சர் ஐம்பது லட்சம் (50,000,00.00) ரூபாவும், மாகாணசபை உறுப்பினர்கள் தமது ஒரு மாத ஊதியத்தை வழங்க இருப்பதாகவும், அதே போன்று அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்கள் தமது ஊதியமான ஒருமாத ஊதியம் எண்பத்தையாயிரம் (85,000.00) ரூபாவையும் வழங்க இருப்பதாகவும் வடமாகாணசபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
வடமாகாணசபையினால் சேகரிக்கப்படும் நிதி ஒரு கோடி ரூபாவைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சேகரிக்கப்பட்ட நிதியானது எதிர்வரும் 21ம் திகதி கையளிக்கப்படவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒரு கோடி ரூபாவும், துடுப்பாட்ட வீரர் குமார்சங்கக்கார அறுபத்தைந்து லட்சம் (65,000,00.00) ரூபாவும் வழங்கியுள்ளார்கள்.
வடமாகாண சபையினைப் பொறுத்தவரையில் சிறிய பங்களிப்பாயினும் அதனை வழங்குவதற்கு முன்வந்திருப்பது என்பது அனைவராலும் பாராட்டத்தக்கதொரு விடயமாகும்.