இன்று காலை வடமாகாணசபையில் நடைபெற்ற அமர்வின் பொழுது வவுனியா அரசாங்கா அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வடமாகாணசபை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்வதாக வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு தொலைபேசி ஊடாக தெரிவித்திருந்த அதே நேரம், இதற்குரிய நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்றும், மூன்று மாதகாலங்களுக்கு முன்னர் இவருடைய மாற்றம் தொடர்பில் நான் தான் இந்தப் பிரேரணையை வடமாகாணசபைக்குக் கொண்டு வந்தேன். சில அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, தனிப்பட்ட அரசியல் செல்வாக்குகள் காரணமாக இவரது மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று மாகாணசபைகளின் சுகாதார அமைச்சுக்கள் அனைவரும் கொழும்பில் ஒன்று கூடல் நிகழ்வில் இருந்த காரணத்தினால் தன்னால் சமூகமளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்த அவர் துரிதகதியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தினப்புயல் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.