ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பிக்குகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்றிரவு 10.00 மணியளவில் பிக்குகள் பயணித்த கார் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவசர திருத்த பணிகளை மேற்கொள்ளும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது காரில் பயணித்த பிக்குகள் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை பின்னவல பகுதியிலிருந்து ஹற்றன் வழியாக மாத்தளை நோக்கி பயணித்த கார் ஒன்றும் மாத்தளையிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த அவசர திருத்த பணிகளை மேற்கொள்ளும் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.
கார் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சாரதி போதையில் இருந்ததாகவும் அவரை கைது செய்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்த சந்தேக நபரான சாரதியை இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.