வட மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் இவர்களுடைய இடத்திற்கு புதியவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த யாழ் மாவட்ட உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த அங்கஐன் இராமநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வைத்திய கலாநிதி சிவமோகன் சிவனேசன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சோந்த ஜெயதிலகா ஆகியோருடன் குருநாகல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கமும் தேர்தலில் போட்டியிட்டார்கள். இதில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வைத்தியகலாநிதி சிவமோகன் தேர்தலில் வெற்றி பெற ஏனையோர் தோல்வி அடைந்தார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அங்கஐன் இராமநாதன் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தனின் இடத்திற்கு அடுத்த பட்டியலில் உள்ள ஒய்வுபெற்ற அதிபர் தர்மலிங்கமும் வைத்தியகலாநிதி சிவமோகனின் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஸ்வரனும் இதேபோன்று யாழ் மாவட்டத்தைச் சோந்த அங்கஜன் இராமநாதனின் இடத்திற்கு அலெக்சாண்டர் சாள்ஸும் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.