வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் போர்க் கொடி

140

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களம் சுமார் 8606.02 ஹெக்டயர் நீர்ப் பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக எடுத்திருக்கும் முயற்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்வி க்குள்ளாக்குவதாக வடமாகாணசபையில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாணசபையின் 125 ஆவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ந டைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரச்சினை தொடர்பாக சபையில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தார். குறித்த பிரேரணை மீதான விவாதத்தின்போதே உறுப்பினர்கள் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்த பிரேரணை தொடர்பாக சபையில் தொடர்ந்து பேசப்படுகையில்;

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன வள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், இராணுவம், அரச காணிகள், என ஒட்டுமொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதி மத்திய அரசாங்கத்தின் கைகளுக்குள் இருந்து கொண்டிருக்கின்றது. மாகாணசபைக்குரிய நிலம் ஒரு ஹெக்டயரும் கூட இல்லை. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளினதும் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டிய நிலை உருவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், வடமாகாணசபையின் இந்த பிரேரணையை சகல நாடுகளினதும் தூதுவராலயங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அதேபோல் வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு சகல நாடுகளினதும் தூதுவராலயங்களுக்கும் சென்று உண்மை நிலையை வெளிப்படுத்தவேண்டும். மேலும் இலங்கையில் 28 வீதமாக உள்ள வ னப்பகுதியை 35 வீதமாக அதிகரிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் அது இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் சரியாக பங்கிட்டு செய்யப்படவேண்டும். வடமாகாணத்தினை மட்டும் வனப்பகுதியாக மாற்ற இயலாது. குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் அரசாங்கம் அங்குள்ள மக்களிடமிருந்து பெறும் காணிகளுக்கு மாற்றிடாக வவுனியாவில் காணிகளை வழங்குகின்றது. கேகாலை மாவட்டத்தில் உள்ளவருக்கும், வவுனியாவுக்கும் என்ன சம்மந்தம்?

மேலும் இரணைமடு குளத்திற்கு பின்புறமாக பெரிய காட்டுக்குள் இராணுவம் விமான ஓடுதளங்களை அமைத்துள்ளது . அதேபோல் கேப்பாபிலவு காட்டுக்குள் இராணுவம் விமான ஓடுபாதைகளையும் முகாம்களையும் அமைத்துக் கொண்டிருக்கின்றது. அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்கு இயலாத அரசாங்கம் மக்களுடைய குடியிருப்புக்களை வன பகுதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பிரேரணையில் குறி ப்பிட்டுள்ளவாறு ஜனாதிபதி, மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தீர்மானம் அனுப்பிவைக்கப்படுவதுடன், முன்னதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நில பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று அத ற்கான செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலணியிலும் இந்த விடயம் தொடர்பாக பேசுவோம் என்றார்.

SHARE