தந்தை செல்வநாயமோ தேசியத் தலைவர் பிரபாகரனோ இங்கே இன்றில்லாத காரணத்தினால் … ஆனாலும் எமது நீதியரசரான முதல்வர் இங்கிருந்தபோதும்……..
அனைவருமே கபடதார சுயநல அரசியலுக்காக, தங்களது தொடர்ச்சியான இருப்பிற்கான, செயற்பாட்டை மட்டுமே குறியாகக்கொண்டு செயற்பட்டு, எமது ஈழதேச மக்களின் சுதந்திரமான சுகவாழ்வை தங்களது சுகவாழ்விற்காக குழிதோண்டிப் புதைப்பதற்கான கைங்காரியங்களில் வன்முறைகளின் பின்புறமாகவிருந்து செயற்படுகின்றார்கள் என்பது தான் அப்பட்டமான உண்மை.
ஜனநாயக சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களோ அன்றி பொது அமைப்புகளோ தமது உணர்வுகளை, எழுச்சிகளை அமைதியான முறையில் சாத்வீகமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைப்பதனை விடுத்து வன்முறைகளில் ஈடுபடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மாணவி வித்தியாவின் படுகொலை இப்பொழுது நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையை தொடர்ந்து வடக்கில் ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்த பலர் முனைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் பின்பறத்தில் தமிழ் மக்களது சுதந்திரமான சுகவாழ்விற்கெதிரான சக்திகள் பலமாக செயற்படுகின்றன.
அவர்களில் ஒரு குழுவினர் எமது மக்கள் வன்முறையாளர்கள்.. என்கின்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சர்வதேசத்திற்கு செய்தி சொல்லி வடமாகாணத்திலுள்ள அரசினது இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்த முனைகின்றார்கள்.
மற்ற குழுவினரோ விடுதலைப் புலிகள் மீண்டும் முனைப்பு பெற தொடங்கிவிட்டார்களென்றும் மைத்திரிபால+ ரணில் அரசு சர்வதேசத்துடன் சேர்ந்து அவர்கள் சார்பாக இருக்கின்றதென்கின்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைப்புடன் செயற்படுகின்றார்கள்.
கட்டுக்கடங்காத வன்முறைகள், நீதி மன்றத்தின் மீதான தாக்குதல்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் என்பன பாரிய எதிர்விளைவுகளை தரும் என்பதனை இவற்றில் ஈடுபடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வித்தியாவின் படுகொலையும் அவர் மீதான கூட்டு பாலியல் வன்புணர்வும் மிகக்கொடூரமானவை… குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை…
அதே வேளை வன்முறைகளை தூண்டுவதன் ஊடாக எதிரிகள் தப்பித்து கொள்ளவும், நீதி மறுக்கப்படவும், பிரதான பிரச்சினை திசை திருப்பப்படவும், கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்படவும் வழிகோலும் என்பதனை வன்முறையில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கைதிகளை அனுராதபுரம் அனுப்ப எடுக்கும் நடவடிக்கையை தடுக்க வன்முறையை வழியை தவிர்த்து வேறுவழியில் செயற்படவேண்டும். அனுராதபுரம் மாற்றப்பட்டால் பிரச்சினை எமது கைகளை தாண்டி சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.