டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கள் என்பவருக்கு மானசி, பாரோ, சுகோ என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
குடிசைப் பகுதியில் வசித்து வந்த அவர்கள் வாடகை கட்டாததால் விரட்டப்பட்டு புதிய இடத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் மங்களின் ரிக்ஷா திருடு போனதால் அந்தக் குடும்பம் இரண்டு வாரங்களாக வறுமையில் தவித்து வந்தது. வேலை தேடி போன மங்கள் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.குழந்தைகளின் தாய் பீனா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இதனால் மூன்று குழந்தைகளைப் பராமரிக்க யாருமில்லாத நிலையில் மூவரும் பட்டினியால் வீட்டில் மயங்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேத பரிசோதனையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளின் வயிற்றில் தண்ணீரும் உணவும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி.
இதனால் குழந்தைகள் பட்டினியால் இறந்தது உறுதியாகியுள்ளது.