நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினால் மன்னார் மாவட்டத்தில் 15,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,600 குடும்பங்களைச் சேர்ந்த 15,120 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ளவர்கள் குடிநீர் இல்லாமல் பாரிய கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களில் இன்றைய தினம் 2 மணிக்குப் பின்னர் மழையுடனான காலநிலை நிலவும் எனவும் இந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மழை பெய்யும் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நேரங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் காலநிலை மத்திய நிலையத்தின் வானிலை அதிகாரி சத்திஸ்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.