வரவு செலவுத் திட்டம் – 2023

166

வௌிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்காக மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் புதிய பொருளாதார வலயங்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேவைகளின் அடிப்படையில் அரச சேவையின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்வதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை செய்வதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வரி விதிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவையும் நிறுவ வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி சலுகைகள் வழங்கப்படும் நிலையில், தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு பீடிக்கு இரண்டு ரூபாய் வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் மூலம் மதுபான உற்பத்திகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக புதிய ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கலால் திணைக்களத்தின் கீழ் இந்த புதிய ஆய்வு கூடம் நிறுவப்படவுள்ளதாக தெரிவித்தார். 

நியமங்களை தயாரிக்கும் நிறுவனம் இல்லாத நிலையில், மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானத்தை இனங்கண்டு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், முறையற்ற மதுபானம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம் என்பதன் அடிப்படையில் இந்த ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதன்படி, இந்த புதிய ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி, இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

 

 

SHARE