இலங்கையில் ஒவ்வொரு வழக்கும் சுமார் பத்து வருடங்கள் காலதாமதமாவது மிகவும் கவலைக்குரிய விடயம் என அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிலை உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இருப்பதாக தனக்கு தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
இலங்கையில் ஒவ்வொரு வழக்கும் சுமார் பத்து வருடங்கள் காலதாமதமாகுவதால் மக்களும், நீதிமன்றங்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளில் 99 சதவீதமானவை சிறிய குற்றங்களுக்கானவை.
அவை சிறியளவு கஞ்சா அல்லது சுருட்டு வைத்திருந்தமை, சிறிய காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பானதாக உள்ளன.
எனவே அனைத்து வழக்குகளையும் ஒரு வருடத்துக்குள் முடிவிற்கு கொண்டு வரும் வகையிலான நடவடிக்கையை எடுக்க நீதி அமைச்சு ஆவன செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.