
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வேப்பங்குளம் பகுதியில் உள்ள குறித்த மாணவியின் வீட்டுக் கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியே கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த மாணவி கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையில் கணித பாட பெறுபேறு அற்ற நிலையில் குறித்த பாடசாலையில் உயர்தரம் சென்றுள்ளார்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சை தேற்றுவதற்கான அனுமதி அட்டை வந்த போதும் பாடசாலையில் அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் அதன் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார்.
தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என வவுனியா பொலிஸார் கூறினர்.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரை, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலய அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.