வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு:

93

 

வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா பெபேரா தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தக சங்க வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸார் நடவடிக்கை
வவுனியா நகரில் கண்டி வீதி,பஜார் வீதியில் அண்மையில் வர்த்தக நிலையங்கள் சில உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு நீதிமன்ற நடவடிக்கைக்குட்பட்ட பிரதான குற்றவாளி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அத்துடன் இரண்டாம் குறுக்குத் தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள பெறுமதி வாய்ந்த பக்க கண்ணாடிகள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொண்ட நடவடிக்கையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பொதிகள் சேவை நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றும் நபர் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறானவர்கள் தொடர்பில் வர்த்தகர்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்.

போதைப் பொருள் பாவனை
வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நத்தார், புதுவருடம், தைப்பொங்கல் ஆகிய பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெருமளவு மக்கள் நகருக்கு வருகை தருவார்கள்.

மேலும் வவுனியா சாரதிகள் வீதி நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை, அதிக விபத்துக்கள் மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் இடம் பெறுகின்றன.

தற்போது நாடு முழுவதும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வவுனியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வர்த்தக சங்கம் முன்வரவேண்டும்.” என்றார்.

SHARE