
வவுனியா – சமணங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆச்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது 27) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அத்துடன், இந்த குடும்பஸ்தருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதன்போது அந்த குடும்பஸ்தர் காலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டை மீளப் பெற்று சமாதானமாக செல்வது குறித்து இந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இவரிடம் கோரிய போதும் இவர் அதனை மறுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த குடும்பஸ்தர் சமணங்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அந்த இளைஞர்களுடன் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக மீண்டும் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.