தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) கழகத்தின் மறைத்த தோழர்களையும் அனைத்து இயக்க போராளிகளையும், யுத்த காலத்தில் மரணித்த பொது மக்களையும் நினைவுகூரும் முகமாக வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இம்முறையும் 13/07/2016 தொடக்கம் 16/07/2016 வரையான காலப்பகுதியை தமது தோழர்களின் வீரமக்கள் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்கள் உயிர்நீத்த தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
27ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகளாக எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் காலை 10.00 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். .
இதில் புளொட் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
15 ஆம் திகதி காலை இரத்ததான நிகழ்வு வவுனியாவில் நடைபெறும் அதேவேளை, 16 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இரத்ததான நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான 16ம்திகதி அன்று செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மாலை 04.00 மணியளவில் மலரஞ்சலி மற்றும் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.
திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)
உப தலைவர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
