வவுனியா சிங்கள மக்கள் வீதியில் இறங்கியது இனவாதத்தின் உச்சக்கட்டம்!

214

4-4

புலிகளுக்கு எதிராக கூட வீதியில் இறங்கிப் போராடாத வவுனியா சிங்கள மக்களை தற்போது வீதியில் இறக்கிப் போராடுவது இனவாதத்தின் உச்சநிலையே என வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புலிகள் இருக்கும் வரை புலிகளுக்கு எதிராகவோ, தமிழ் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ வீதியில் இறங்கி போராடாத வவுனியா சிங்கள மக்கள் இன்று வீதிகளில் இறக்கிவிடப் பட்டிருப்பது இனவாதத்தின் உச்சநிலையே.

கொழும்பிலிருந்து வந்து தமிழ் சிங்கள உறவை சீர்குலைக்க மத அடிப்படைவாதிகளும், இனவாதிகளும் வடக்கின் வாசலுக்கு வந்து அப்பாவி சிங்கள மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சிக்கு அரசாங்கம் துணை போய்விடக்கூடாது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பரிப்பவர்களின் இந்த நாடகம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகள் வழங்காமல் தடுப்பதற்கான பேரினவாதத்தின் ஆரம்ப ஒத்திகையே.

இது முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டியது. இல்லையேல் தமிழ் மக்கள் தேசிய அரசின் மீது வைத்துள்ள எஞ்சிய நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.

புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படும் அரசியல் கலாச்சாரமும், வரலாறும் மாற்றப்படக்கூடிய வாய்ப்புக்களை அரசாங்கம் தவறவிடக்கூடாது.

இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக பேரினவாதிகள் என உலகில் முத்திரை பொறிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி க்குள்ளும் பசுத்தோல் போர்த்துக்கொண்ட பேரினவாத சிங்கங்கள் கர்ச்சிக்க தொடங்கிவிட்டன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தேசிய அரசாங்கத்தின் உண்மை முகங்களை காணமுடியும். இனவாத நிகழ்ச்சி நிரலில் இணைந்து கொள்ள திரை மறைவில் திட்டம் தீட்ட தேசிய அரசாங்கத்தின் பொய் முகங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் போன்ற இனவாதிகளையும், மதவாதிகளையும், சிறைக்குள் வைத்து பூட்டாத வரை தேசிய அரசாங்கத்தால் எதையும் சாதிக்கவும் முடியாது.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுத்தரவும் முடியாது. அரசாங்கத்தால் சீராகவும் செயற்படவும் முடியாது.தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப காரணமானவர்களும் இவர்களே.

இவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தவறின் மைத்திரி, ரணில் கூட்டணியினரும் வீட்டுக்கு செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையினதும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் உணர்வு பூர்வமான, உரிமைக்கான போராட்டத்தையும் பொதுபலசேனாவின் உப்புச்சப்பில்லாத போராட்டத்தையும் வேறுபடுத்தி நனியாயத் தன்மையை அரசு சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும்.

அரசு உடனடியாக தலையிட்டு இனவாத சக்திகளை குப்பைக்கூடைக்குள் தூக்கிப்போட தாமதிக்குமாயின் அரசின் திரை மறைவு ஆதரவுடனேயே மத, இன அடிப்படைவாதிகளின் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு செய்யப்படுவது உறுதி செய்ததாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE