வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

289

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் மாற்றம் சரியானது என்கின்றார் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா.

kurukularaja_003

கடந்த இரு வாரங்களாக வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான தமிழ் மகா வித்தியாலயத்தில் உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தனது மகனுடைய உடையினை கத்தரிக்கோலால் வெட்டியதன் காரணத்தினால் ரவீந்திரனுடைய மகன் தந்தையிடம் சென்று முறையிட்டதன் காரணத்தினால் அவர் அதிரடி நடவடிக்கையாக உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றினார் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதரவாக பழைய மாணவர்களும் செயற்பட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் மாணவன் அணிந்திருந்த ஆடையினை வெட்டிய விடயம் தவறே. ஏற்கனவே இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகள் இருக்கின்றன. இவருடைய செயற்பாடானது ஒரு மனித உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது.

 

ஏற்கனவே இப்பாடசாலையில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். சுந்தராங்கன் ஆசிரியர் என்பவர் தேசிய பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அனுமதி பெற்றவர் அல்ல. அவருடைய அனுமதியானது மாகாண பாடசாலைகளுக்குரிய அனுமதியே. சுற்றுநிரூபத்தின் அடிப்படையிலே உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த அவர், மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியம் இல்லை. தமது சொந்த நலன்களுக்காக சிலர் இவ்விடயத்தில் செயற்படுகின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்ரன் சோமராஜா அவர்கள் தெரிவிக்கையில், சுற்றுநிரூபத்தின் அடிப்படையிலே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களையும், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் ஒன்றிணைத்து சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்து இதற்குச் சரியான தீர்வொன்றினை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களினுடைய நிலைப்பாட்டின்படி அவர்களாகவே முன்வந்து இந்த ஆர்ப்பாட்டத்தைச் செய்யவில்லை. ஒரு சில பழைய மாணவர்களுடைய செயற்பாடுகளே இவ் ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுகின்றது. இதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குச்சென்று நிலைமைகளை அவதானித்ததுடன், உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கனின் நடவடிக்கைகள் தவறு என்றும் சுட்டிக்காட்டிய அவர் அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களைச் செய்யக்கூடாது. இவ்விடயமானது தனிப்பட்ட ஆசிரியர் சம்பந்தப்பட்டது. அதற்கான குழுவை நியமித்து ஆசிரியர் சங்கத்துடன் கலந்தாலோசித்து இதற்கான சரியான தீர்வுகளை முன்னெடுப்பதே சிறந்தது எனக்கூறினார்.

vavummv589d

இவ்விடயம் தொடர்பில் பாடசாலையினுடைய அதிபர் மரியநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், மாணவர்களையோ, ஆசிரியர்களையோ இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாம் தூண்டவில்லை. அவர்களாகவே முன்வந்து உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் இந்த பாடசாலைக்குத் தேவை என்று கூறி இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் செயலாளர் ரவீந்திரனிடம் பேசியிருக்கின்றேன். உடற்பயிற்சி ஆசிரியர் மாற்றத்திற்கு காரணம் இதுவல்ல. இது சுற்றுநிரூபத்தின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்ட அவர் குறிப்பிடப்பட்ட சம்பவத்தின்போது மாற்றம் செய்யப்பட்டதே மாணவர்களிடையே ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. வெளிப்படையாக உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் செயற்பட்ட விதம் சட்டரீதியாக தவறாக இருக்கின்றபோதிலும் மாணவர்கள் மத்தியில் அது செயலாளர் ரவீந்திரன் அவர்களுடைய மகனுக்கு உடையினை வெட்டியதன் காரணமாகவே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளார் என்பது மாணவர்களுடைய குற்றச்சாட்டு. இதன் அடிப்படையிலேயே தொடர்ந்தும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஓரிரு தினங்களில் இதற்கான சரியான தீர்வுகளை முன்னெடுப்போம் என்று அவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற மாணவர்களுடைய ஆர்ப்பாட்டமானது பன்னிரண்டு மணியளவில் முடிவிற்கு வந்தது. இருந்தும் இவ் ஆசிரியர் விவகாரம் தொடர்பில் முடிவுகளை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இப் பாடசாலையானது யுத்தத்திற்கு முன்னர் பல்வேறு ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழும் குழுநிலை மோதல்களாகவே செயற்பட்டு வந்தது. குறிப்பாக ரவுடித்தனங்கள் நிறுத்தப்பட்டு தற்போது இருக்கக்கூடிய அதிபர் மரியநாயகம் அவர்களால் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இதனைச் சீர்குலைக்கும் நோக்கில் ஒரு சில அரசியல் வாதிகள் சுயலாபம் தேடுவோராக செயற்பட்டு வருவதன் காரணமாக இப் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் மிக முக்கியமான பாடசாலைகளில் ஒன்று தான் இந்த தமிழ் மத்திய மகாவித்தியாலயம். உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் அவர்களும் மாணவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற ஒருவர். அவருக்கு ஆதரவான மாணவர்களும் இருக்கின்றார்கள். சிறியதொரு விடயத்தை பாரதூரமாகக் காட்டுவதன் ஊடாக மாணவர்கள் மத்தியில் வன்முறைகளைத் தோற்றுவிக்கும் நிலையே உருவாகும். இதனை எந்த அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி உடனடிக் கவனத்திற்கொண்டு மாணவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இன்றி தமது கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆதரவளிக்கவேண்டும்.

radhakrishnan-575-01

இவ்விடயம் தொடர்பில் கல்வியின் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் தொடர்புகொண்டு வினவியபொழுது, இவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு குழுவை அனுப்பி இருவாரங்களுக்குள் அதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தனிப்பட்ட கோபதாபங்களை பாடசாலை மட்டத்தில் வெளிப்படுத்துவது என்பது தவறான ஒரு செயல். ஆகவே பாடசாலை மாணவர்களின் கல்வியில் நாம் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்து பாடசாலை மாணவர்கள் தமது கல்வியிலேயே கவனம் செலுத்தவேண்டும். அதுவே எமது நிலைப்பாடு இதற்கான உடனடி நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தினப்புயல் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

89c46cbc-bb46-460f-9e88-a54c5eb70202 879c229b-a563-47d2-bd09-d0990544992c cabe3893-1b17-4346-90b1-7d83b01f8fac e536bf40-8cbc-48f5-878a-c26278c9a0b0 ffc394a0-4e70-4d50-9647-5df4462e1ac1

SHARE