வவுனியாவில் சுற்றுலா மையம் சிறப்பாக திறந்துவைப்பு: இலங்கை, வவுனியா வவுனியா கல்நாட்டினகுளம் சுற்றுலா மையம் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் ஆளுக்குட்பட்ட கல்நாட்டினகுளம் பகுதியில் வடமாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட 8.41மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா இன்று 05.07.2018 காலை 10மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனினால் மக்கள் பாவனைக்கு திறந்து கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச தவிசாளர் திரு. து. நடராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சுற்றுலா மையத்தினையும் சிறுவர் பூங்காவினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ஜி. ரி. லிங்காநதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வினோதரலிங்கம், சிவநாதன் கிஸோர், வவுனியா நகரசபை தவிசாளர் திரு. இ. கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ் தெற்கு பிரதேசசபை உப தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.