வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் கோரிக்கை!

164

news-1

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது 5ஆவது சந்தேகநபர், நீதவானிடம் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என நீதவான் எம்.எம்.ரியாள் குறிப்பிட்டார்.

அத்தோடு, வித்தியா கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை தமக்கு வாசித்துக் காட்டவேண்டுமென மூன்றாவது சந்தேகநபரால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய நீதவான் வழக்கு தொடர்பான அனைத்து விடயங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு அதுவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE