நிதி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் அபேவர்தனவின் மகன் செலுத்திய அதி சொகுசு ஜீப் வண்டி ஒன்று நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த ஜீப் வண்டி, மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டதில் அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின் பின்னர் அமைச்சரின் மகனை பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவதாக ஒரு இலட்சம் ரூபாவாவை காயமடைந்த இளைஞரின் உறவினர்களிடம் வழங்கியதுடன், 3 லட்சம் பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு வாகனத்தை அங்கு விட்டு அவர் தப்பி சென்றுள்ளார்.
அவரிடம் இருந்த சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை விபத்துக்குள்ளான இளைஞரின் உறவினர்களிடம், உத்தரவாதமாக பிரதி அமைச்சரின் மகன் வழங்கி விட்டு சென்றுள்ளார்.
எப்படியிருப்பினும் அதன் பின்னர் அவர் அங்கு வருகைத்தராமையினால் குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகள் ஜீப் வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அமைச்சரின் மகன் வழங்கிய சர்வதேச சாரதி அனுமதிபத்திரத்தை இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதற்கமைய பிரதி அமைச்சரின் மகன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதன் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான இளைஞர் இன்னமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற பிரதி அமைச்சரின் மகனுக்கு இவ்வாறு பிணை வழங்கியமை தொடர்பில் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் 32 வயதுடைய மகன் ஓட்டிய வாகனம் நிதி அமைச்சின் வாகனம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குருந்துவத்தை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.