
விஷால் நடிப்பில் அடுத்ததாக ‘அயோக்கியா’ படம் வருகிற ஏப்ரல் 19-ந் திரைக்கு வர இருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக விஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் விஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

காரில் செல்லும் வில்லன்களை 4 சக்கரம் உள்ள வெளிநாட்டு பைக்கில் விஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த விஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.