வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் “செப்பல் சி 3” சிறைக்கூடத்திலிருந்து 15 கைப்பேசிகளை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் 3எ ரக உயர் தொழில்நுட்பம் கொண்டவையும் இருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
செப்பல் சி 3 சிறைக்கூடத்தில் நூறு மரணதண்டனைக் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் அந்தச் சிறைக்கூடத்தின் சுவர்களிலும் தரைக்குக் கீழும் ஆங்காங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளின் சிம் கார்டுகள் மேலதிகப் பரிசோதனைகளுக்காக புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்தது.