
வெலிக்கடை சிறைச்சாலை வடிகாண்கள் மற்றும் கைதிகள் தடுப்பு அறைகள் என்பவற்றினுள் ஏராளமான எலிகள் சுதந்திரமாக உலாவி வருகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலை நிர்வாகம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதாரப் பிரிவினரைக் கொண்டு எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வரலாற்றில் வெளியிலிருந்து அதிகாரிகளை அழைத்து வந்து எலிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
வெலிக்கடை சிறை வளாகத்தினுள் சுமார் 4000 எலிகள் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விசம் வைத்துக் கொல்வது குறித்தே தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக எதிர்வரும் வாரத்தினுள் இரண்டு நாட்கள் அளவில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் சிறைச்சாலை வளாகத்தினுள் எலி வேட்டையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுமார் 15 அதிகாரிகளை எலிவேட்டையில் ஈடுபடுத்த மாநகர சபை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
சிறைக் கூண்டுகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 3500 வரையான கைதிகள் இந்த எலித் தொல்லை காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன், அவர்களுக்கு எலிக்காய்ச்சல் மற்றும் கொலரா போன்ற பாரிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.