தகுதியில்லாத தூதுவர்களை நீக்கிவிட்டு வெளிநாட்டு சேவையில் அனுபவமிக்கவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இருக்கின்றனர். அத்துடன் சாக் வலய நாடுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தூதுவர்களும் அரசியல் நியமனமாகும்.
மேலும் கடந்த காலங்களில் இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கட்டவர்கள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலே செயற்பட்டுள்ளனர்.
அத்துடன் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ள இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு படை ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தானதாகும் எனவும் குறிப்பிட்டார்.