வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டாம்

166

பண்டிகை காலங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வடக்கு பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டாமென யாழ். மாவட்ட வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெயசேகரம் உள்ளூராட்சி திணைக்களங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டிகை காலங்களில் தென்னிலங்கை வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் வட. பகுதியில் அதிகரித்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“பண்டிகைக்காலங்களில் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் வட.மாகாணத்திற்கு வருகைதந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அதனை தடைசெய்ய மாகாண சபையில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியிருந்தோம். அதற்கும் மேலாக சில சட்டவாக்க நடவடிக்கைகளும் வகுக்கப்பட்டு அனைத்து உள்ளூராட்சி திணைக்களங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த அறிவுறுத்தலின்படி உள்ளூராட்சி திணைக்களங்கள் செயற்பட வேண்டும். ஏனெனில், உள்ளுர் வர்த்தகர்கள் வரி செலுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாவட்டத்திலிருந்து வரும் வர்த்தகர்கள்,  நிரந்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலையில் வட. பகுதி வர்த்தகர்களின் பொருளாதார நிலை மிக மோசமாக பாதிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினாலும், வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவினாலும் பல வர்த்தகர்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளதுடன், தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  எனவே, இந்த விடயத்தில் உள்ளூராட்சி திணைக்களங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதேபோன்று வட.பகுதி வர்த்தகர்கள் தென்னிலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு வர்த்தகத்தில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் .

எனவே எமது வர்த்தகர்களுக்கு இடையூறாக செயற்படும் தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு வடக்கில் அனுமதி வழங்கக்கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE