வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர்

71

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

சமந்தா பவர் நேற்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே இதனை வலியுறுத்தியதாக ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் புரிதலை மேம்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் எவ்வாறு சாத்தியமான முன்னோக்கி செல்லும் பாதையை ஆதரிக்க முடியும் என இதன்போது இருவரும் கலந்துரையாடினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்த சமந்தா பவர், இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்தல் உட்பட, இலங்கையின் சிக்கலான நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் என்றும் ஜெசிகா ஜென்னிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சமாதானம் மற்றும் செழிப்பைப் பாதுகாக்க உதவுவதற்காக, இலங்கையுடனான தனது நீண்டகால கூட்டாண்மையை மேலும் வளர்ப்பதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் உறுதியாக உள்ளது என்றும் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார்.

SHARE