ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்பூசல் வலுத்துவரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தி கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்திரியும் பச்சைக் கொடி காட்டியுள்ளார் என சு.க. வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.
இதன்பிரகாரம் மே தினத்துக்கு முன்னர் இந்தச் சந்திப்பு நடைபெறலாம் எனவும் அறியமுடிகிறது. ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதியான மஹிந்தவும் வெவ்வேறு அணியில் இருந்தால், சுதந்திரக் கட்சி இரண்டாக உடையும் என்றும், எனவே, ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் இருவரும் மேதினத்தில் ஒரே மேடையில் ஏறவேண்டும் என்றும் சு.க. உறுப்பினர்கள் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.
இதில் சந்திரிகாவையும் இணைந்து கொள்ளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக மூவரையும் ஒரே மேடையில் ஏற்று வதற்கான முன்னேற்பாடகவே விசேட சந்திப்புக்கான நகர்வு இடம்பெறுவதாக தெரியவருகிறது. எனினும், இது பற்றி இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதேவேளை, தமது மேதின கூட்டத்துக்க தலைமை வகிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. –