பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாடகைக்கு பெற்றுக்கொண்ட அதிசொகுசுக்காரில் மூன்று இலட்ச ரூபா பெறுமதியான ஹெரோயினைக் கடத்திய சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சிறைச்சாலை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் மூன்று கைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன்.
அதிசொகுசுக் காரில் ஹெரோயின் கடத்தப்படுவதாக பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த காரை, பண்டாரகம, வீதாகம பிரதேசத்தில் பொலிஸார் வழிமறித்து சோதனை நடத்தமுயற்சித்தபோது சிறைக்காவலர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை அவர்களிடம்காட்டி தாங்கள் குருநாகல் பிரதேசத்திலுள்ள மரண வீடொன்றுக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்.
எனினும், பொலிஸார் அவரது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் காரை சோதனையிட்டபோது அதற்குள் வெகு சூட்சுமமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த ஹெரோயினும் மூன்று கைப்பேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பாணந்துறை குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் சந்தேகநபர்கள் இருவரையும் காரையும் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை, சந்தேகநபர்கள் இருவரும் தென் தலங்கம பிரதேசத்தின் ரொபர்ட் குணவர்தனமாவத்தையைச் சேர்ந்தவர்கள் என்று பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.