பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் 1009 ஓட்டங்கள் குவித்து வரலாறு படைத்த சிறுவனுக்கு சச்சின், டோனி என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையில் பண்டாரி கிண்ணம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
இதில் திருமதி கே.சி. காந்தி பள்ளி சார்பில் கலந்து கொண்ட அணியில் பிரணவ் தனவாடே என்ற 15 வயது சிறுவன், 395 நிமிடங்கள் களத்தில் நின்று 323 பந்துகளை சந்தித்து 129 பவுண்டரி, 59 சிக்சர்களுடன் 1009 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்சில் அதிக பட்ச ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலகசாதனையை படைத்தார். புதிய வரலாறு படைத்த பிரணவ் தனவாடேக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, முன்னாள் ஜாம்பவான் சச்சின், ரஹானே, ஆகாஷ் சோப்ரா என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டோனி கூறுகையில், ”1009 ஓட்டங்கள் எடுப்பது என்பது கொமடி இல்லை. உண்மையில் இது மிகப்பெரிய விடயம். அவரது திறமை பாதுகாக்கப்பட வேண்டும். நீண்ட நேரம் துடுப்பாட்டம் செய்வது அலுப்படைய வைக்கும் விடயம். ஆனால் அவர் அதை செய்துள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். சச்சின் கூறுகையில், ”முதன்முதலில் ஒரு இன்னிங்சில் 1000 ஓட்டங்களை கடந்த பிரணவ் தனவாடேக்கு வாழ்த்துக்கள். புதிய சிகரங்களை தொட வேண்டியது முக்கியமான ஒன்று” என வாழ்த்தியுள்ளார். |