
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் 169 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் 31 பேருக்கு எதிராக நீதிமன்றிற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் நிதிக் குற்றவியல் பிரிவிற்கு மேலதிகமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம்.
இதேவேளை, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடி விட சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு எதிரான விசாரணைகளை தடுத்து நிறுத்த இவ்வாறு முயற்சிக்கின்றனர்.
தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விஸ்தரிக்கப்பட வேண்டும்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு மட்டுமன்றி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட பிரிவுகளுக்கும் அதிகளவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.