இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம்

156

இலங்கை கிரிக்கெட் அணியில் வடமாகாண தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ள இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் நடைபெற்ற வர்ண இரவுகள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

யாழ். குடாநாட்டிலே முன்னொரு காலத்தில் மாணவர்கள் எவ்வாறு கல்வி பயின்றார்கள் என்பதை எனது பெற்றோர் எனக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள்.

வீட்டில் வெளிச்சம் இல்லாத இரவுகளில் வீதி விளக்குகளின் வெளிச்சத்திலிருந்து கல்வி கற்றார்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு கல்வி கற்றவர்கள்தான் தென்பகுதியில் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு ஒரு சிரமமான காலத்தில் கல்வி முன்னேற்றமாக இருந்தது ஆனால் கடந்த சில காலங்களில் கல்வி பின்னோக்கி சென்றது. ஆனால் தற்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கல்வி முன்னோக்கி வருகின்றது.

எதிர்வீரசிங்கம், ஆழிக்குமரன் ஆனந்தன் தற்போது ஆசிய கூடைப்பந்தாட்டத்தை சுவீகரித்த தர்சினி போன்றவர்கள் வடமாகாணத்திலிருந்தே இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்தார்கள். அதேபோன்று இங்கே நான் கண்ட பலர் தேசிய மட்டத்தில் பல பதக்கங்களை பெற்றிருக்கின்றார்கள். அவர்களை மேலும் வளப்படுத்த வேண்டும்.

சர்வதேச அணிகளுடன் விளையாடக்கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசியாவில் விளையாடி இலங்கைக்கு பெருமையை தேடித்தந்த செல்வி தர்சினியை பாராட்டும் அளவுக்கு எனக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் நான் கவலையடைகிறேன்.

அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை தெரிவித்து அவர்களை பிளவு படுத்த நினைக்கின்றார்கள். தமது தலைமைத்துவத்தை தக்க வைக்க நினைக்கின்றார்கள். அவர்களின் பிழையான தகவல்களை கருத்தில் கொள்ளாது சரியானவற்றை இனங்கண்டு செயற்படுமாறு உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.அகிலதாஸ் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE