2½ வயது குழந்தைக்கு பயண சீட்டு எடுக்கச் சொன்ன பஸ் நடத்துனர்

169

பஸ்ஸில் பயண சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஸ் நடத்துனரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டு சென்ற சம்பவம் இந்திய நாகை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர் நேற்று தனது 2½ வயது குழந்தையுடன் சீனிவாசபுரத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ்சில் பணிபுரிந்த நடத்துனரிடம் திருவாரூருக்கு ஒரு பயண சீட்டு தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு நடத்தனர், உங்கள் குழந்தைக்கும் பயண சீட்டு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இதயத்துல்லா, தனது குழந்தைக்கு 2½ வயது தான் ஆகிறது. எனவே பயண சீட்டு எடுக்க தேவையில்லை என்று கூறினார்.

ஆனால் நடத்தனரோ, குழந்தைக்கு 2½ வயது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எனவே பயண சீட்டு எடுத்தே ஆக வேண்டும் என்று விடாபிடியாக கூறினார். இதனால் இதயத்துல்லாவுக்கும், நடத்துனக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த இதயத்துல்லா, எனது குழந்தைக்கு 2½ வயது என்பதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். இருங்கள்… எனது பிறப்பு சான்றிதழை கொண்டு வருகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இதயத்துல்லா அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது தனது குழந்தையை நடத்துனரிடம் கொடுத்து விட்டு குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்து வருகிறேன் என கூறி பஸ்சை விட்டு கீழே இறங்கி அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார்.

இதயத்துல்லாவின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பஸ் நடத்துனர், அந்த குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவித்தார். பின் அந்த குழந்தையை பேரளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற இதயத்துல்லா, தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்துக் கொண்டு பேரளத்துக்கு வந்தார்.

பேரளம் போலீஸ் நிலைய வாசலில் கூட்டமாக இருப்பதை கண்ட இதயத்துல்லா அங்கு சென்று போது அங்கு தனது குழந்தை இருப்பதை பார்த்ததும் நடந்த சம்பவத்தை தெரிவித்து தனது குழந்தையை வாங்கி சென்றார்.

சுமார் 2 மணி நேரம் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அந்த குழந்தை இதயத்துல்லாவிடம் ஒப்படைத்தனர்.

SHARE