மூன்றாவது தடவையல்ல தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்படுகின்றார். இதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யவும் தயாராகவே இருக்கின்றார். இப்படித் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் அவர் நடத்திய மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் யுத்த வெற்றிக்கு நன்றிக் கடனாகவே 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எமது இனத்துக்கு எதிராக அநியாயங்களையே இந்த அரசு செய்தது.
இதற்காக மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல தண்டனையக் கொடுத்துள்ளோம். எமது இனத்தின் மீது கை வைப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கும் இவ்வாறான தண்டனைகளை வழங்கத் தவற மாட்டோம்.
நாம் இவ்வாறானதொரு முடிவை எடுப்போம் என அரசாங்கமோ, மக்களோ நினைத்துக்கூடப் பார்க்க மாட்டீர்கள். ஏனெனில் நாம் கடந்த 9 வருடங்களாக அரசாங்கத்துக்குப் பலமாக இருந்து ஜனாதிபதியை உருவாக்கிய பங்காளிகளில் ஒருவர். அபிவிருத்திக்குப் பலமாக இருந்த எங்களின் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற கட்சியினரே இவ்வாறான முடிவை எடுப்பர் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களை கூட்டியிருப்பர். ஆனால் முடிவுதான் இன்னமும் எடுக்கவில்லை. – என்றார்