2015ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒன்பது இலட்சத்து ஐம்பாதாயிரம் ரூபா நிதியானது (950,000.00)வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்து பிரதேசங்களிலும் உள்ள 42 சங்கங்கள் உள்வாங்கப்பட்டு அவற்றுக்கு தலா 25 நாற்காலிகள் வழங்கப்பட்டதோடு ஐம்பாதாயிரம் ரூபாய் நிதியானது (50,000.00) தையற்பயிற்சி பெறும் மாணவிகளின் பயிற்சித்துணிக்கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்முன்னெடுப்பு தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய துரைராசா ரவிகரன் அவர்கள் கருத்துரைக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகள் மென்மேலும் மேம்படுவதற்கான ஓர் ஊக்குவிப்பு முன்னெடுப்பாகவே இது அமைகிறது. உள்வாங்கப்பட்டுள்ள 42 சங்கங்களும் கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு என ஐந்து பிரதேசங்களிலும் இருந்து பரவலாகவே உள்வாங்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் கிராமங்கள் தோறும் முன்னெடுக்கபட்ட மக்கள் குறைகேள் சந்திப்புகளில் கிராமத்தவர்களாலும் கிராம அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலே இச்சங்கங்கள் இவ்வாண்டில் உள்வாங்கப்பட்டுள்ளன.
கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் இருந்து தலா ஒன்பது சங்கங்களும் ஏனைய மூன்று பிரதேசங்களில் இருந்து தலா எட்டு சங்கங்களும் உள்வாங்கப்பட்டு அவற்றுக்கு தலா 25 நாற்காலிகள் வழங்கப்படுகின்றன.
அத்தோடு மிகுதியாகும் 8 நாற்காலிகளும் பாலிநகர் குமாரசாமி வித்தியாலத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தையற்பயிற்சி பெறும் மாணவிகளின் பயற்சித்தேவைக்கான துணிகளுக்காக ரூபா ஐம்பதாயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஏனைய இயங்குநிலை சங்கங்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகள் தொடரும் என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்வுகளின் போது பிரதேச செயலர் திரு.பிரணவநாதன் அவர்களும் உதவிப்பிரதேச செயலர்கள் திரு.குருபரன், திரு.பிருந்தாகரன் மற்றும் திரு.ரமேஸ் ஆகியோரும் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு பகீரதன் மற்றும் திரு பவானந்தன் ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திலீபன் அவர்களும் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.